Saturday 8 September 2012

விருது பெரும் தோழர் த . சிவக்குமாருக்கு வாழ்த்துக்கள்


நமது சங்கத்தின் சட்ட ஆலோசகரும் , வழக்கறிஞருமான தோழர் த. சிவக்குமார் அவர்கள் மாணவர்களும் , சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக 1 . தீங்கியல் சட்டம்  , 2 . சட்ட மொழி ,3 . வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகள் ,4 . இலவச சட்ட உதவி மற்றும் பொது நல வழக்காடுதல் , 5 . தொழிலாளர் மற்றும் தொழிற்சட்டங்கள், 6 . வரிவிதிப்பும் வரிச்சட்டங்களும்  ஆகிய நூல்களை தமிழில் எழுதியுள்ளார் . தொடர்ந்து நல்ல  தமிழில் சட்ட நூல்களை வெளியிட்டும்  வருகிறார். அவரது எழுத்து பணியினை பாராட்டி 'சட்ட கதிர் மாத இதழ்' இந்தாண்டிற்கான சிறந்த  தமிழ் சட்ட நூலுக்கான விருதினை அவருக்கு வழங்குகிறது. இந்த விருதினை 09 .09.2012 அன்று ராணி சீதை ஹாலில் 9.30 மணிக்கு உச்ச நீதிமன்ற , உயர்நீதிமன்ற மற்றும் மத்திய ,மாநில அமைச்சர்கள் பங்கு பெரும் நிகழ்ச்சியில் பெற இருக்கிறார். அவருக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

Saturday 1 September 2012

கொலைகார, குரோனி முதலாளித்துவ நிர்வாகங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுத்துள்ள சவாலை எதிர் கொள்வோம்


மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் ஏகபோகங்கள் உருவாவதைப் பற்றி விரிவாக எழுதினார். குறிப்பாக டிரஸ்ட்கள் மற்றும் கார்டல்கள் என்ற ஏகபோக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விரிவாக விளக்கினார். எவ்வாறு ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏகபோகங்கள் உருவாயின என்பதை அந்நூலில் அவர் விளக்கினார்.

ஆனால் நவீன முதலாளித்துவம் அதனைத் தாண்டித் தற்போது பல மடங்கு சென்றுள்ளது. ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஏகபோகங்கள் உருவாகும் போக்கையெல்லாம்   தாண்டி லாபம் கிடைக்கும் அனைத்துத் தொழில்களிலும் சேவைகளிலும் மூலதன வலுக் கொண்ட நிறுவனங்கள் முதலீடு செய்து அத்தொழில்களை நடத்துகின்றன. இதில் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒப்பந்தத் தொழிலிலும் பெரும் பெரும் ஒப்பந்தத் தொழிலாளர் நிறுவனங்களை ஏற்படுத்தி பல ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துள்ளன.